Thursday, 28 December 2017

பாரதத்தாய்

பாரதத்தாய்
வாய்மையும் அறமும் பிறர்துயர் களையும்
வண்மையும் தியாகமும் இணைதீர்
தூய்மையும் ஒழுங்கின் கலியினில் வளர்ந்து
துலங்கிடத் தீமையும் துயரும்
சேய்மையுற் றகலத் தோன்றிய கருணைச்
செங்கதி ரவனெனத் தகைய
தாய்மையன் பிறனை யீன்றபா ரதத்தாய்
தாள்மலர் பணிவதே தவமாம் .

– அசலாம்பிகை அம்மையார்

பொருள் :

உண்மை, அறம், பிறர் துன்பம் நீங்கும் திறன், தியாகம்,
இணையற்ற ஒழுக்கம் ஆகியவற்றை இக்கலிகாலத்தில் வளர்ந்து
விளங்கச் செய்பவன். தீமை, துன்பம் இவற்றை அகன்றோடச்
செய்யும் கருணைக் கதிரவன் போன்றவன். தாய்மையுள்ளம்
கொண்டவன். இத்தகைய தன்மைகள் கொண்ட மகாத்மா
காந்தியை ஈன்றெடுத்த பாரதத்தாயின் மலரடிகளைப் போற்றி
வணங்குவதே பெரும் பேறாகும்.
சொற்பொருள் :

1. வாய்மை – உண்மை
2. களையும் – நீக்கும்
3. வண்மை – வள்ளல் தன்மை
4. துலங்குதல் – விளங்குதல்
5. சேய்மை – தொலைவு
6. தவம் – பெரும்பேறு

No comments:

Post a Comment