Thursday, 30 November 2017

நந்திகலம்பகம்

நந்திக் கலம்பகத்தின் உறுப்புகள்
நண்பர்களே! நந்திக் கலம்பகம் என்ற நூலின் துணையுடன் கலம்பக இலக்கியத்தின் உறுப்புகள் சிலவற்றைக் காண்போமா?
4.3.1 புயம்

கலம்பக இலக்கியத்துள் இடம் பெறும் உறுப்புகளில் ஒன்று புயம் என்பது ஆகும். புயம் என்றால் தோள் என்று பொருள். நூலினுள் இடம் பெறும் தலைவனின் புயத்தின் அழகையும் ஆற்றலையும் புகழ்ந்து கூறுவதாக இந்த உறுப்பு அமைகின்றது. முத்துவீரியம் என்னும் பாட்டியல் நூல் புயம் என்ற உறுப்பை வாகு, வகுப்பு என்கின்றது. இன்னொரு பாட்டியல் நூல் ஆகிய பிரபந்த தீபிகை இந்த உறுப்பைப் புய வகுப்பு என்கின்றது.

நந்திக் கலம்பகத்தில் புயம் என்ற உறுப்பு தோள் வகுப்பு என்ற பெயரால் குறிப்பிடப்படுகிறது. இந்த உறுப்பு அமையும் பாடல் இதோ தரப்படுகிறது. தோள் வகுப்பு என்பதற்குத் தோளின் பல சிறப்புகளை வகைப்படுத்திக் கூறுதல் என்று பொருள் கொள்ளலாம்.
மறமதம் கரிதிசை நிறுவின
     மணிநகை யவர்மனம் நகுவன
விறலர சர்கள்மனம் நெகிழ்வன
     விரைமலர் களிமுலை பொருவன
திறலுடை யனதொடை புகழ்வன
     திகழொளி யனபுகழ் ததைவன
நறுமல ரணியணி முடியன
     நயவர நினதிரு புயமதே
(நந்.கலம்பகம் - 11)


(மறம் = வலிமை; கரி = யானை; நிறுவன = நிற்கச் செய்தன; நகையவர் = பற்களை உடைய பெண்கள்; நெகிழ்வன = மலர்ச் செய்வன; விறல் = வெற்றி; விரை = மணம்; பொருவன = போர் செய்வன; தொடை = பாட்டு; ததைவன = நெருங்கும் தன்மை உடையன; நயவர = நன்மை பொருந்தியவனே!)
இனி, இந்தப் பாடலில் நந்திவர்மனின் தோளின் அழகும் வலிமையும் எவ்வாறு புகழப் படுகின்றன என்று பார்ப்போம்.




நந்திவர்மனின் தோள்கள் வலிமையும் மதமும் உடைய யானைகளை அந்த அந்தத் திசைகளில் நிற்கச் செய்யும் வல்லமை உடையன. முத்துகளைப் போன்ற பற்களை உடைய பெண்களின் மனத்தை மலரச் செய்வன. வெற்றியை உடைய அரசர்களின் மனத்தை அச்சம் கொள்ளச் செய்வன. மணம் நிறைந்த மாலையை அணிந்த பெண்களின் மார்புகளுடன் போராடுவன. பளபளப்பு உடையன. புலவர்களால் பாராட்டப் பெறுவன. ஒளி நிறைந்தன. அணிகள் அணிந்து உயர்ச்சி பெற்ற மேலிடம் உள்ளன என்று புகழப்படுகின்றன.

இந்தப் பாடலில் வரும் அடிகளைப் பாருங்கள். சிறு சிறு சொற்றொடர்களாக அமைந்து இன்பம் தருகின்றன. பெண்களின் பற்களுக்கு முத்துகள் உவமை ஆகக் கூறப்படுகின்றன.

இந்தப் பாடலில் நந்திவர்மனின் தோள்களின் ஆற்றல், வெற்றிச் சிறப்பு, அழகு, ஒளி, புகழ் என்பன கூறப்படுகின்றன. பெண்களுக்கு இன்பம் கொடுக்கும் தோள்கள். பகைவர்களுக்கு அச்சம் செய்யும் தோள்கள் என்று தோள்களின் மென்மையும் வலிமையும் புகழப்படுகின்றன. இவ்வாறு தோள்களின் பெருமைகளைக் கூறும் உறுப்பாகத் தோள் வகுப்பு என்ற உறுப்பு அமைகின்றது.

No comments:

Post a Comment