புணர்ச்சி (இலக்கணம்) இந்த பக்கம் சில பிரச்சனைகளை கொண்டுள்ளது இலக்கணத்தில் புணர்ச்சி அல்லது சந்தி (சமஸ்கிருதம்: संधि, "சேர்த்தல்") என்பது இரண்டு சொற்கள் இணையும்போது உச்சரிப்பில் உண்டாகும் மாற்றமாகும்.[1] இவை இந்திய மொழிகளான சமஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழிகளில் அதிகமாகக் காணப்படுகின்றன. ஆனால் இந்த உச்சரிப்பு மாற்றம் எந்தவொரு மொழியிலும் இயற்கையாக நிகழும். பெரும்பாலான மொழிகளில் எழுத்துவடிவம் சந்தியைப் பயன்படுத்துவதில்லை. ஆனால் தமிழ் மற்றும் சமக்கிருத மொழிகளில் எழுத்திலக்கணத்தில் சந்தி ஒரு விதிமுறையாக உள்ளது. இரண்டு சொற்கள் இணையும் போது முதலில் உள்ள சொல் நிலைமொழி என்றும் வந்து இணையும் சொல்லை வருமொழி என்றும் கூறுவர். தொல்காப்பியத்தில் இவை நிலைமொழி- குறித்துவரு கிளவி என குறிப்பிடப்படுகின்றன. சொற்கள் புணரும்போதும் ஒரு எழுத்து தோன்றுதல் அல்லது சொல்லின் இறுதி எழுத்து வேறொரு எழுத்தாக மாறுதல் அல்லது ஒரு எழுத்து மறைதல் (கெடுதல்) போன்ற மாறுபாடுகள் தோன்றும். தமிழ்மொழியில் தோன்றும் இந்த மாறுபாடுகளை விகாரம் அல்லது திரிபு என வழங்குகிறோம். மாறுபாடுகள் தோன்றாமல் சொற்கள் புணரும் நிலையை இயல்புப் புணர்ச்சி என்கிறோம்.